சித்தர் சிவகுருநாதரிடம் அருளாசி பெற்ற சிவ பக்தர் தங்கவேலுவின் பரம்பரையைச் சேர்ந்த முத்துச்சாமி என்னும் முருக பக்தர் தான் முதல் தலைமுறை. இவர் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்தவர். சித்தருக்கு முருகன் கொடுத்த ஏட்டையும், பொருட்களையும் சிவகுருநாதரால் உண்டான புற்றின் அருகில் வைத்து புற்றுக்கு பூஜை செய்து அதிலிருந்து எடுத்த மண்ணும், பச்சிலையும், விபூதியும் கொடுத்து தன்னை நாடி வந்த மக்களுக்கு குறை தீர்த்தார். இவரின் வழிவந்த பரமசிவன் அடிகளார் இப்போது ஸ்ரீ புற்றுமுருகன் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள்வாக்கு கொடுத்து அருள் ஆட்சி செய்கிறார்.
இவர் நான்காவது தலைமுறை. ஐந்தாவது தலைமுறை இவரது மகன் சாலிகுளநாதன்.
அடிகளார் அவர்கள் தமது 25 வது வயதில் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள் வாக்கு கொடுத்தார். 1978ல் முருகனின் கட்டளைப்படி வெட்டவெளியில் 12 மணி நேரம் உணவு ஏதும் அருந்தாமல் தவம் இருந்தார். தை மாதம் கடைசி வியாழன் இரவு 12 மணிக்கு தவத்திலிருந்து எழுந்து அருள் ஆசி வழங்கினார். அடுத்த ஆண்டு பூமிக்கு அடியிலிருந்து தவம் செய்ய உத்தரவு கிடைக்க ஐந்து ஆண்டுகள் தை மாதம் கடைசி வெள்ளி என்று 12 மணி நேரம் தவம் இருந்து அருள் பெற்று பக்தர்கள் துயர் நீக்கினார். தற்போது 16 ஆண்டுகள் முருகன் அருளால் 37 மணி நேரம் தவம் செய்துள்ளார். ஆகஸ்ட் 1989 ஆம் ஆண்டு இல்லறத்தைத் துறந்து தனி பர்ணசாலை அமைத்து அதில் அமர்ந்து இறைவழிபாடு செய்து புற்றுக்கு நைவேத்தியமான சாதத்தை மட்டும் புசிக்கிறார். ஞாயிறு அன்று பிற்பகல் 1 மணி அளவில் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள்வாக்கின் மூலம் பக்தர்களின் பிணியையும், வறுமையையும் நீக்கி சௌபாக்கியத்தை கொடுக்கிறார்.
இத்திருத்தலத்தின் தலவிருட்சம் வேல மரம் ஆகும். சிவகுருநாதர் தவம் செய்த இடத்தில் உருவானதே இந்த வேலமரம். இங்குதான் சித்தருக்கு சிவபெருமானும், அன்னை பார்வதியும் சிவசக்தி சொரூபமாக காட்சி காட்சி கொடுத்தனர். அடிகளாருக்கு அருள் காட்சி கிடைத்ததும் இங்கேதான். இந்த தல விருட்சத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும். இது கண்ணால் கண்ட உண்மை. என்னே இறைவனின் திருவிளையாடல்!
சாலிகுளம் சித்தர் பீடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து புன்னகை பூக்க ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் அருள் ஆட்சி செய்கிறார். இங்கு இருந்து தான் விழா காலங்களில் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து சித்தர் பீடத்தை வலம் வந்து அருள் பெறுகிறார்கள்.